சென்னை: ரப்பர் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசு ரப்பர் கழக தொழிலாளர்களுக்கு 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022-ம் ஆண்டு நவம்பர் வரை நாளொன்றுக்கு 40 ரூபாய் ஊதிய உயர்வு ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் ரப்பர் கழகம் ஊதியம் தர மறுத்ததால் கடந்த 7-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொழிலாளர்களுடன் அரசு சார்பில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றி அவர்களது வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும். தே.மு.தி.க எப்போதும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்கும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.