×

ஷ்ரத்தா கொலையை போல் டெல்லியில் அடுத்த கொடூரம்; கணவனை கொன்று 10 துண்டுகளாக கூறுபோட்ட மனைவி, மகன் பிரிட்ஜில் வைத்து குப்பை தொட்டியில் வீசினர்

புதுடெல்லி: டெல்லியில் ஷ்ரத்தா கொலையை போல் 2வது கணவனை 10 துண்டுகளாக கூறுபோட்டு பிரிட்ஜில் வைத்து தினமும் குப்பை தொட்டியில் போட்ட தாய், மகனை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் அப்தாப் 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்து காட்டில் சென்று வீசினார். மே 18ம் தேதி நடந்த இந்த கொலையில் தற்போதுதான் அப்தாப் கைது செய்யப்பட்டுள்ளார். ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதே போல் டெல்லி கல்யாண்புரியிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. அங்கு முதல் மனைவிக்கு கணவன் பணம் அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த 2வது மனைவியும், அவரது மகனும் சேர்ந்து கொடூரமாக கொன்று 10 துண்டுகளாக கூறுபோட்டுள்ளனர். உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து விட்டு தினமும் இரவில் சென்று குப்பை தொட்டியில் வீசியுள்ளனர்.

இதுபற்றிய விவரம் வருமாறு டெல்லி கல்யாண்புரி ராம்லீலா மைதானத்தில் கடந்த ஜூன் 5ம் தேதி ஒரு பையில் இருந்து சில உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த உடல் பாகங்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். எனினும் அடையாளம் காணமுடியவில்லை. இந்நிலையில் ஷ்ரத்தா கொலை பற்றிய தகவல் வெளிவந்ததும், அந்த உடல் பாகங்கள் ஷ்ரத்தா வால்கருடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அது ஷ்ரத்தாவின் உடல் இல்லை என்பதோடு, ஆணின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஒரு பெண் மற்றும் வாலிபர் பையுடன் அடிக்கடி அந்த பகுதிக்கு வந்து சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பாண்டவ் நகரை சேர்ந்த பூனம் மற்றும் அவரது மகன் தீபக் என அடையாளம் காணப்பட்டது. அவரது கணவர் அஞ்சன்தாஸ் காணாமல் சென்று 6 மாதங்கள் ஆகியும் பூனம் புகார் கொடுக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மகனுடன் சேர்ந்து அஞ்சன் தாசை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பூனத்தின் முதல் கணவர் 2017ம் ஆண்டு புற்றுநோயால் இறந்து விட்டார். இதையடுத்து   தனது மகனோடு அஞ்சன் தாசுடன் சேர்ந்து பூனம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அஞ்சன் தாஸ் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது முதல் மனைவி மற்றும் 8 பிள்ளைகள் பீகாரில் உள்ளனர்.

அவர்களுக்கு பூனத்தின் நகையை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை பீகாரில் உள்ள முதல் மனைவிக்கு அஞ்சன் தாஸ் அனுப்பி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூனம் அவரை கொல்வதற்கு முடிவு செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அஞ்சன் தாசை மதுக்குடிக்க வைத்துள்ளார். அவர் சுயநினைவை இழந்த நிலையில், மகனுடன்  சேர்ந்து அவரை கொன்று 10 துண்டுகளாக வெட்டியுள்ளனர். உடல் பாகங்களை ப்ரிட்ஜில் பதுக்கி வைத்து ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தியுள்ளதும், அங்குள்ள குப்பை தொட்டி, காலி மைதானங்களில் வீசி வந்ததும் தெரியவந்துள்ளது. இதுவரை அஞ்சன் தாசின் 6 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஷ்ரத்தா கொலையை தொடர்ந்து, அதே பாணியில் அஞ்சன் தாஸ் கொலை நடந்து இருப்பது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Tags : Delhi ,Shraddha , Next Atrocity in Delhi Like Shraddha Murder; After killing her husband and cutting her into 10 pieces, the wife put her son on the bridge and threw them in the garbage bin
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...