கொடைக்கானல்: வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரண்டு தினங்களாக இரவில் நடுங்க வைக்கும் கடுமையான குளிரும், பகலில் இதமான குளிர் சூழலும் நிலவுகிறது. இந்த ரம்மியமான சூழலை அனுபவித்து ரசிக்க வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. மேலும் இரண்டு தினங்களுக்கு முன் கப்பிள்ஸ் சீசன் தொடங்கிய நிலையில் வட மாநில சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. இதேபோல் அடுத்தடுத்து கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருவதால், அதனை கொண்டாடவும், வெளிநாட்டு பயணிகளின் வருகையும் துவங்கியுள்ளது. கொடைக்கானலில் குளிர் வாட்டி வருகிறது. இனி வருங்காலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.