பொன்னேரி: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாலை மீஞ்சூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மீஞ்சூர் பேரூர் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேரூர் செயலாளர் தமிழ் உதயன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவராமன், நகர இளைஞரணி செயலாளர் மில்லர், முன்னாள் பேரூர் செயலாளர் லெனின், மாவட்ட பிரதிநிதி சசிகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தில்லை குமார், ஆனந்தகுமார் ஆகியோர் பங்கேற்று, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு அபிஷேகம், திமுக கொடியேற்றி இனிப்பு வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நகராட்சியில் அடங்கிய அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்களை அடையாளம் கண்டறிந்து பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்வது குறித்து வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பேரூர் நிர்வாகிகளான முன்னாள் துணை செயலாளர் ஜோசப், துணை செயலாளர் கணேஷ், ஒன்றிய பிரதிநிதி திருப்பதி உள்பட ஏராளமான இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.