பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே நேற்றிரவு லாரி மீது, வேன் மோதியதில் சபரிமலையில் இருந்து திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வைரபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த அன்பழகன் மனைவி சுலோச்சனா(52). இவரது குடும்பத்தினர் 18 பேர், சுற்றுலா வேனில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சபரிமலையில் இருந்து திண்டிவனத்துக்கு நேற்று புறப்பட்டு வந்தனர். ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த ராஜா(40) வேனை ஓட்டி சென்றார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அடுத்த செங்குணம் பிரிவு ரோடு பகுதியில் நேற்றிரவு 11.45 மணிக்கு வேன் வந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி, திடீரென சாலையின் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் திரும்பியது. இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக ேமாதியது. விபத்துக்கு காரணமான லாரியை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டி சென்று விட்டார்.
இந்த விபத்தில் வேன் டிரைவர் ராஜாவுக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுலோச்சனாவுக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. மேலும் குப்பம்மாள்(65), ராஜேஷ்(38), நித்தீஸ்வரன்(12), சண்முகம்(58), தேன்மொழி(55), சாந்தகுமாரி(55), ராஜசேகர்(33), முருகன்(44), சீனிவாசன்(25), விஜயா(58), விஜயலட்சுமி(59), அமுதபாரதி(55) என 14 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 14 பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.