×

திருநின்றவூர் தனியார் பள்ளியில் மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு

ஆவடி: திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவிகள், ஆசிரியைகளுக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லை தொடர்பாக நிர்வாகி வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அருகே திருநின்றவூர், லட்சுமிபுரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்பட 25 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. தாளாளராக சிந்தை ஜெயராமன் என்பவரும் நிர்வாகியாக அவரது மகன் வினோத் என்பவரும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளிடம் கவுன்சிலிங் என்ற பெயரில் வினோத் தனியறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் சென்னை-திருப்பதி சாலையில் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனிடைடேய பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லதா தலைமையில் போலீசார் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து பள்ளி நிர்வாகி வினோத்தை தேடி வந்தனர். இந்த நிலையில், பள்ளி நிர்வாகி வினோத் இன்று காலை பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘’எங்கள் பள்ளியில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி. எங்களின் பள்ளி மாணவ-மாணவிகள் மிகவும் நல்லவர்கள்.

யாருடைய பேச்சையோ கேட்டு, என்மீது பாலியல் தொல்லை மற்றும் அத்துமீறல் என்று பல்வேறு அவதூறுகளை பரப்பி வருகின்றனர். நீங்கள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கும்போது, நான் உயிருடன் இருப்பேனா என தெரியவில்லை. என்மீது பொறாமை காரணமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இதில் இருந்து விடுபட வழிதெரியாமல் தவித்து வருகிறேன்’ என்று பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Tags : Tiruninnavur , Sexual harassment of female students and teachers in Tiruninnavur private school: A video released by the administrator caused a sensation
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...