புதுடெல்லி: டிவிட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகள் என்பதை தெரிவிக்கும் புளூ டிக் சேவை மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதன் பிறகு அவர் அதில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்தும் நீலநிற புளூ டிக் குறியீட்டு வசதியை அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், பயனாளர்களிடம் இருந்து மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாதம் 7.99 அமெரிக்க டாலராக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இச்சேவையை பெற மாதம் ரூ.639 செலவாகும். இந்த புளுடிக் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது. பின்னர், அது நிறுத்தப்பட்டது. இந்த வாரத்தில் இச்சேவை மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், புளூ டிக் சேவையை தொடங்குவது மீண்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், இந்த சேவையை பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வெவ்வேறு அடையாள நிறங்களை வழங்க உள்ளதாகவும் எலான் மஸ்க் நேற்று தெரிவித்தார்.