திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை; தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கைவினை கலைஞர்களுக்கு விராசத் கடன் திட்டம் 1ல் குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்குகள் கிராமப் புறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். திட்டம் 2ல் குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1ல் ஆண்களுக்கு 5 சதவீதமும் பெண்களுக்கு 4 சதவீதமும் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. திட்டம் 2 ல் ஆண்களுக்கு 6 சதவீதமும் பெண்களுக்கு 5 சதவீதமும் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் அவர்கள் சேர்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். அலுவலக தொலைபேசி எண்.9840984176. மின்னஞ்சல் முகவரி dbcwo.tntir@nic.in தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.