செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா குப்பநத்தம் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே உள்ள விவசாய நிலத்தில் ராஜவேலு (65) என்பவர் வீடுகட்டி வசித்து வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (60), தாய் கண்ணம்மாள் (90). வழக்கம்போல் நேற்றிரவு வீட்டை பூட்டி விட்டு 3 பேரும் தூங்கினர். நள்ளிரவில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல், வீட்டின் கதவை தட்டினர். சத்தம் கேட்டு ராஜவேலு எழுந்து வந்து கதவை திறந்தார்.
அடுத்தகணமே திபுதிபுவென உள்ளே புகுந்த அந்த 5 பேரும், ராஜவேலு, தேன்மொழி, கண்ணம்மாள் ஆகியோரை சரமாரியாக தாக்கி கை, கால்களை கட்டி போட்டனர். பின்னர் பீரோவை திறந்து 6 சவரன் தங்க நகை, ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பினர். அதிகாலையில் அவ்வழியாக வந்த அக்கம் பக்கத்தினர், சந்தேகத்துடன் சென்று பார்த்தனர். 3 பேரும் கை, கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கட்டுகளை அவிழ்த்தனர். தகவலறிந்து செங்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகின்றனர்.