சென்னை: நுரையீரல்களில் ரத்த உறை கட்டிகளின் காரணமாக, இதய செயலிழப்பு ஏற்பட்ட 33 வயதுடைய பெண்ணுக்கு காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து, மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும், நுரையீரல் நிபுணருமான டாக்டர் சீனிவாஸ் ராஜகோபாலா கூறியதாவது: எங்கள் மருத்துவமனைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, காலில் வீக்கம் என்ற பிரச்னையோடு 33 வயதுடைய பெண் வந்தார். காவேரி மருத்துவமனையை அணுகினார். நுரையீரல்களில் ரத்தக்கட்டிகள் இருப்பது கண்டறியப்படுவதற்கு முன்பு 3 முதல் 4 மாதங்கள் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.
ஒரு விரிவான பரிசோதனைக்குப் பிறகு, ஆன்டிபாஸ்போலிபிட் சின்ட்ரோம் இருப்பது இவருக்கு உறுதி செய்யப்பட்டது. சில ஆண்டுகளாக நுரையீரலில் ஏறக்குறைய 70% அளவுக்கு ரத்த உறைகட்டிகள் அடைப்பை ஏற்படுத்தியிருந்ததால், ரத்தம் பாயும் பகுதியின் அளவு மிகவும் குறைந்திருந்தது. இதனால், அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இந்த பெண் நோயாளியின் உடல் நிலையை மிக கவனமாக ஆய்வு செய்த நுரையீரலியல், இதயவியல், மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை குழுவினர் அடங்கிய ஒரு குழு, ஒரு அறுவை சிகிச்சை செய்தது. ரத்த உறைகட்டிகளோடு சேர்த்து பாதிக்கப்பட்ட தமனியின் உட்புற படர் சவ்வின் ஒரு பகுதியையும் சிகிச்சையின்போது மருத்துவர்கள் அகற்றினர். குறிப்பாக ஒடுக்கமான ரத்த நாளங்களை மூடியிருக்கிற உட்புற படர்சவ்வுகளையும் நோயாளிக்கு அகற்றுவதற்கு உரியவாறு அறுவை சிகிச்சை திட்டமிடப்பட்டது. ஆனால், இப்பெண் நோயாளியின் நிலைமை மிகத் தீவிரமாக இருந்ததால் இவரது இதயத்தின் இடதுபுறத்தில் 120 mm Hg என்பதோடு ஒப்பிடுகையில், வலதுபுற இதயத்தின் அழுத்தம் 134 mm Hgஆக இருந்தது.
இதன் காரணமாக பெண்ணின் நிலைமை மோசமாகி அவரது இதயம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள் குறைய தொடங்கின. இவரது சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்பட்டது. உணர்விழப்பிற்கான மயக்க மருந்தின்கீழ் இந்த சிக்கலான அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. பெண்ணின் இதய செயல்பாடு முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டு ரத்தமானது ஒரு செயற்கை பம்ப் மூலம் உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது. அத்துடன், ஆழமான குளிர்விப்பு நிலையில் அதாவது 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இவர் வைக்கப்பட்டார்.
இதனால் மூளையின் செயல்பாடு மெதுவாக நடைபெறுவதற்கும் மற்றும் ஆக்சிஜன் அனுப்பப்படும் நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதற்கும் இது வழிவகுத்தது. 20 நிமிடங்கள் சுழற்சி கால அளவில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மாற்று 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை அவரது ரத்த ஓட்டம் நிறுத்தப்படும் மற்றும் நுரையீரலின் ரத்த நாளங்களின் ஒவ்வொரு பகுதியும் சுழற்றலின்கீழ் வைக்கப்பட்டது. ஒவ்வொரு சுழற்சிக்குப் பிறகும், மூளையை பாதுகாப்பதற்காக ரத்த ஓட்ட சுழற்சி மீண்டும் தொடங்கப்படும். சிக்கல் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை 5-6 மணிநேர காலஅளவிற்குப் பிறகு வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு, படிப்படியாகவும் மற்றும் நிலையாகவும் பெண்மணி பாதிப்பு நிலையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, சென்னை காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர்-செயலாக்க இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
ஆன்டிபாஸ்போலிபிட் சின்ட்ரோம் என்பது உயிருக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் ஒரு அரிதான பாதிப்பு நிலையாகும் மற்றும் நீண்டகால அளவிற்கு கண்டு பிடிக்கப்படாமலேயே இது இருக்கக்கூடும். நோய்ப் பாதிப்பை கண்டறிதலில் ஏற்படும் தாமதம் அதிக சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதற்கு சிகிச்சை அளிப்பதில் நேரம் மிக முக்கிய அம்சமாக இருக்கிறது. துரதிருஷ்டவசமாக, இப்பெண்ணுக்கு இருந்த அதிக நுரையீரல் ரத்த அழுத்தத்தின் காரணமாக இப்பெண்ணால் வெற்றிகரமாக கருத்தரிக்க இயலவில்லை.
இந்த பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக நவீன செயல் உத்திகளுடன் கூடிய அதிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக டாக்டர் குமுத் குமார் திட்டல் மற்றும் டாக்டர் சீனிவாஸ் ராஜகோபாலா ஆகியோரை பாராட்டுகிறேன். இவ்வாறு கூறினார்.