மதுரை: தமிழறிஞர் தேவநேய பாவாணரின் பேத்தி பரிபூரணம் காலமானார். மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம், தேவநேயபாவாணரின் மணிமண்டப காப்பாளராக, செய்தி மக்கள் தொடர்பு துறையில் அரசு உதவியாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பரிபூரணம் (57) முதுகுத்தண்டுவட பாதிப்பு மற்றும் மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்னையால் மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.
அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். பரிபூரணம் மறைவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘தேவநேய பாவாணரின் பேத்தி பரிபூரணம் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து வருந்துகிறேன். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் குடும்பத்தார் மற்றும் தமிழார்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.