×

தாம்பரத்தில் நள்ளிரவு பரபரப்பு: தனியார் ஓட்டலில் தீ விபத்து

தாம்பரம்: தாம்பரத்தில்  நள்ளிரவு தனியார் ஓட்டலில்  ஏற்பட்ட தீவிபத்தில்  பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம்-முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள குளக்கரை அருகே சத்தார் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த முகமது நசீர் (55) என்பவர், ஓட்டல் நடத்தி வருகிறார்.  இதன் அருகில் சில கடைகளும் உள்ளன. கட்டிடத்தின் முதல் மற்றும் 2வது தளத்தில் குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் ஓட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்தனர்.  அப்போது, சமையல் அறையில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிய துவங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.  உடனே தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

2 தீயணைப்பு வாகனங்களில்  வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் ஓட்டல் முற்றிலும் எரிந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : Tambaram , Midnight commotion in Tambaram: Fire breaks out in private hotel
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!