சென்னை: பாஜ ஆதரவாளர் கிஷோர் கே.சாமி மழை வெள்ளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணிகளை விமர்சிக்கும் வகையில் டிவிட்டரில் விமர்சித்தார். சைபர் க்ரைம் பிரிவு போலீசார் கிஷோர் கே.சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கிஷோர் கே.சாமி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, சமூக ஊடகங்களில் பிறரை துன்புறுத்தும் வகையில் கிஷோர் கே.சாமி தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டுள்ளார். அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று தெரிவித்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகாதவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் இந்த சமூகத்திற்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். எனவே, மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.