மும்பை: இயக்குனர் அட்லியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் எச்சரித்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. அட்லி இயக்கத்தில் ஜவான் இந்தி படத்தில் ஷாருக்கான் நடிக்கிறார். இதில் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 15 நாட்கள் நடைபெற்றது. இப்போது மும்பையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்துக்கான செலவுகளை அட்லி அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் தமிழில் அவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் இதே குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் அட்லி மீது முன்வைத்துள்ளனர்.
படத்துக்கான செலவுகளை திட்டமிட்டதைவிட அதிகமாக இழுத்துவிடுவார் என அட்லி பற்றி சினிமா வட்டாரத்தில் பேசுவது உண்டு. இப்போது பாலிவுட்டுக்கும் சென்று அதையே செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தை தனது சொந்த நிறுவனமான ரெட் சில்லீஸ் மூலம் ஷாருக்கான் தயாரித்து வருகிறார். இந்நிலையில் செலவுகள் அதிகமானதால் ஷாருக்கான் டென்ஷனாகி, அட்லியை கடிந்து கொண்டதாகவும் அவரை எச்சரித்து இருப்பதாகவும் பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இந்த செய்தி, சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.