×

சினேகன் மீதான இறுதி அறிக்கை தாக்கலுக்கு இடைக்கால தடை

சென்னை: பாஜ நிர்வாகி ஜெயலட்சுமி அளித்த புகாரில் பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சினிமா பாடலாசிரியர் சினேகன் ‘சினேகம்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். சினேகம் அறக்கட்டளைக்கு என கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து நடிகை ஜெயலட்சுமி மோசடி செய்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சினேகன் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெயலட்சுமி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன்மீது சினேகன் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் அளித்து தமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியாக கூறி சினேகன் மீது ஜெயலட்சுமியும் புகாரளித்தார். இதனடிப்படையில் சினேகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சினேகன் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சினேகன் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு தடை விதித்து விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : Snegan , Interim stay on submission of final report on Snegan
× RELATED பாடலாசிரியர் சினேகன் புகாரைத்...