திருவள்ளுர்: தமிழ் வளர்ச்சி துறை சார்பாக ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவி மோ.வி.கயல்விழிக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், திருவள்ளுர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவி வீ.செண்பகவள்ளிக்கு 2வது பரிசாக ரூ.3 ஆயிரமும், பெருவாயல் டி.ஜெ.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவி சு.நந்தினிக்கு 3வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் ஆவடி காமராஜ் நகர் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி து.கோபிஸ்ரீ, பழைய அலமாதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி ப.ராதிகா ஆகியோர் சிறப்பு பரிசாக தொகையாக ரூ.2 ஆயிரம் பெற்றனர்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் பட்டரைபெரும்புதூர், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி மாணவி மா.வளர்மதிக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், பட்டாபிராம் டிஆர்பிசிசி இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி மூ.ரஞ்சிதாவுக்கு 2வது பரிசாக ரூ.3 ஆயிரமும், பூவிருந்தவல்லி, பனிமலர் பொறியியல் கல்லூரி மாணவி சீ.தமிழ்பாரதிக்கு 3வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.