போடி: வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகள் பல இடங்களில் சேதடைந்துள்ளன. இதையடுத்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், போடி மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி விலக்கிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி மற்றும் தொடர் மழையால் சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதனை ஜேசிபி இயந்திரம் மூலம் சமப்படுத்தி போடி நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக சீரமைத்தனர்.
இதேபோல், மேலசொக்கநாதபுரத்திலிருந்து போடி-திருமலாபுரம் காமராஜர் சிலை வரை குடிநீரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனை சீரமைத்து மழைநீர் தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. போடி அரசு போக்குவரத்து டிப்போவிலிருந்து போடி பஸ் நிலையம் வரை மழையால் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்தனர். இந்த சீரமைப்பு பணிகளை தேனி கோட்ட பொறியாளர் ரமேஷ், போடி உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜ், பொறியாளர் நதீஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.