மேட்டூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் நேற்று காலை நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 15,200 கனஅடியாக இருந்த நிலையில் 2வது நாளாக இன்றும் அதே அளவில் நீடிக்கிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 33வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அணை பகுதியில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.