சென்னை: 10 சதவீதம் இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. அதிமுகவின் பழனிசாமி தரப்பு, பாஜக புறக்கணித்த நிலையில் மற்ற கட்சிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், திமுக சார்பில் பொன்முடி, வில்சன், மதிமுக சார்பில் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை பங்கேற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், கொங்கு மண்டல தேசிய கட்சி சார்பில் சின்ராஜ், மனித மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா பங்கேற்றுள்ளனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, சின்னத்துரை, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாலு, வெங்கடேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. 10 சதவீத ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தொடர்பாக மேற்கோள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதல்வர் ஆலோசித்து வருகிறார்.