×

தென்காசி அருகே பயங்கரம்: பைக்கில் சென்ற பால் வியாபாரி உட்பட 2 பேர் படுகொலை

ஆலங்குளம்: பைக்கில் சென்ற பால் வியாபாரி உள்பட இருவர் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கள்ளத்தொடர்பு காரணமாக  நடந்ததா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் ஊத்துமலை அருகே நொச்சிகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (26). இவர், கிராமம், கிராமமாக பைக்கில் சென்று அங்கு மாடுகள் வைத்திருப்பவர்களிடம் பால் சேகரித்து அதனை மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு உதவியாக அதே ஊரைச் சேர்ந்த  சூர்யராஜ் (17) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் வழக்கம்போல் ஊத்துமலை அடுத்த சண்முகாபுரத்திற்கு பைக்கில் சென்றனர். அங்கு பால் எடுத்து விட்டு கங்கனாங்கிணறு கிராமத்தை அடுத்த பலபத்திரராமபுரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ஆனந்த் ஓட்டிச் சென்றார். அங்குள்ள காட்டு பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இருவரையும் வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே  இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து ஆனந்தின் உறவினர்கள் தேடியபோது, காட்டுப்பகுதியில் இருவரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆலங்குளம் டிஎஸ்பி சகாயஜோஸ், ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட ஆனந்திற்கு கங்கனாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அவரையும், சிறுவனையும் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து  அந்தப் பெண்ணின் கணவர் செல்வக்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆலங்குளம் - சங்கரன்கோவில் செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர்.

Tags : Tenkasi , Terror near Tenkasi: 2 people killed, including a milk seller on a bike
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...