தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி பகுதியில் தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண், ஆதரவற்ற நிலையில் சுற்றிதிரிந்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, கோவில்பட்டி, வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்த டேவிட் (55) எனவும், அவரது தந்தை பெயர் பால்ராஜ், அவரது தாத்தா பெயர் ஜான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்ததாகவும், அதிலிருந்து தாம்பரம் பகுதியிலேயே சாலையோரம் தாங்கியதும் தெரியவந்தது.
இதனையடுத்து, கருணை உள்ளங்கள் என்ற அமைப்பை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை, ஆய்வாளர் சார்லஸ் வரவழைத்து, ஆதரவற்று சுற்றிதிரிந்த டேவிட்டை குளிப்பாட்டி, அவருக்கு புதிய ஆடை அணிவித்து, உணவு வழங்கி தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து, அவரை மீட்டு செல்லவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சுமார், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்றை சுற்றித்திரிந்த முதியவரை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் சார்லஸ்சை, தாம்பரம் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் பாராட்டியுள்ளனர்.