×

சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகளுடன் முத்தரப்புக் கூட்டம்: அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

சென்னை: 6 மாதங்களுக்கு ஒரு முறை சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகளுடன் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படும். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் நடைபெற்ற ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஜவ்வரிசி தொழிலில் இந்தியாவிலேயே முன்னோடியாக விளங்கக்கூடிய சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள். இதனை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மரவள்ளிக் கிழங்கு விவசாயம், ஜவ்வரிசி உற்பத்தி, ஸ்டார்ச் உற்பத்தி ஆகியவற்றின் மூலமாக தொழில் துறை வளம் பெற்று வருகிறது.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் மரவள்ளி விவசாயிகளை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் இன்றைய தினம் சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவுச் சங்கம் (சேகோசர்வ்) சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுடைய கருத்துக்களைக்கேட்டு, அக்கருத்துக்களின் அடிப்படையில் அதனை நிறைவேற்றித்தரும் வகையில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சேகோசர்வில் மரவள்ளி விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜவ்வரிசி உற்பத்தியில் தவறு மேற்கொள்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து தனியார் சேகோ உற்பத்தி ஆலைகளில் முறையான சுத்திகரிப்பு நிலையம் அமைத்திருப்பதை உறுதிபடுத்திடவும் மாசுக்கட்டுப்பாடு வாரியம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்கள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சேகோச உற்பத்தி பற்றி தவறாக விளம்பரப்படுத்தப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் மரவள்ளி விவசாயிகள் இணைந்து செயல்பட்டு ஜவ்வரிசி உற்பத்தியில் சேலம் மாவட்டத்தை சர்வதேச அளவில் உயர்த்திட வேண்டும். இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயப் பெருமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் சேலம் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் சேவை தொழிற் கூட்டுறவுச் சங்கம் (சேகோசர்வ்) சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் விவசாயப் பெருமக்கள், உற்பத்தியாளர்கள் தங்களது கருத்துகளை இங்கே தெரிவிக்கலாம்.

மரவள்ளி விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றான அரசின் சார்பில் சேகோ தொழிற்சாலை அமைக்கும் கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை சேகோசர்வ் சார்பில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகளுடன் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படும்.

ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் தரமான ஜவ்வரிசியை தயார் செய்திட வேண்டும். தவறு மேற்கொள்பவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனைக் கண்காணித்திட மாவட்ட கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவானது ஜவ்வரிசி உற்பத்தியின்போது வேதிப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்கள் கலப்படத்தினை தடுத்தல், சுற்றுச்சூழல் சீர்கேட்டினைத் தடுத்தல், வரி ஏய்ப்பைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே, மாவட்ட கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து நிறுவனம் சிறப்பாக செயல்படுவதற்கான நிலையை அனைவரும் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு விதை கரணைகள் மற்றும் ஒட்டுண்ணிகளும், தொழில் வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு புதிய தொழில் தொடங்குவதற்கு 6 பயனாளிகளுக்கு ரூ.18.60 இலட்சம் மதிப்பிலான மானிய உதவிகளும், வருவாய்த் துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.41,500/- மதிப்பிலான விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.68 இலட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் செயற்கை கால் மற்றும் செயற்கை கைகள் என மொத்தம் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கு ரூ.25.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, சேகோசர்வ் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்கே.என்.நேரு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பார்வையிட்டார்கள்.

இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அரசு செயலாளர் வி. அருண்ராய், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர்,  சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் (பொ) தே.சிவகுமார், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் கலந்துகொண்டனர்.



Tags : Javarisi ,Segosarv ,Minister ,K. N.N. Nehru ,T. Moe Andarasan , Tripartite meeting with Sorghum producers, traders and mangrove farmers on behalf of Segoserve: Minister K.N. Nehru, Minister Tha.Mo.Anparasan participated
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...