×

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நாளை மறுநாள் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நாளை மறுநாள் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்து வரக்கூடிய 8,9 ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என என வானிலை மையம் கூறியுள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணாமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்கும். இது 9 முதல் 11-ம் தேதி வரை வடமேற்கு திசை நோக்கி திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
08.11.2022 மற்றும் 09.11.2022: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.11.2022 முதல் 12.11.2022 வரை: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால்  மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Tags : Meteorological Department , Northeast Monsoon, Chance of Heavy Rain, Meteorological Centre
× RELATED நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை...