திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீப காலமாக கடும் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று கொச்சியில் ஆரிப் முகம்மது கான் பேட்டியளிக்கப் போவதாக பத்திரிகையாளர்களுக்கு கவர்னர் மாளிகையிலிருந்து தகவல் வந்தது. பேட்டிக்காக பத்திரிகையாளர்கள் கொச்சியிலுள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்றனர். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிவி சேனல் உள்பட பட 2 டிவி சேனல் நிருபர்கள் வெளியேறுமாறு கவர்னர் கூறினார். இதற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் கேடர் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்க மாட்டேன் என்று கவர்னர் கூறியதால் அந்த 2 டிவி சேனல் நிருபர்களும் அங்கிருந்து வெளியேறினர். கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு கேரள பத்திரிகையாளர் சங்கம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.