சென்னை: தமிழக முதல்வர், பட்டியல் இன மக்களை பல்வேறு சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே திருநின்றவூர், கொசவம்பாளையம், கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி (32). இவர், பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு சமூக வலைதளங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், பட்டியல் இன மக்களைப் பற்றியும் பூபதி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகப் பரவியது. இதுகுறித்து திருநின்றவூர் போலீசில் திருவள்ளூர் மத்திய மாவட்ட ஒன்றிய திமுக செயலாளர் பிரேம் ஆனந்த் புகார் அளித்தார்.
இப்புகாரின்பேரில் போலீசார் எஸ்சி/எஸ்டி மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்றிரவு பூபதியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.