×

வாலிபர் மர்ம மரணம் எதிரொலி; சூனியம் வைத்ததாக கூறி பெண்ணை உயிருடன் எரித்துக் கொன்ற கும்பல்: போலீஸ் மீது கல்வீச்சு; பீகாரில் பயங்கரம்

கயா: பீகாரில் வாலிபர் ஒருவர் மரணம் தொடர்பாக பெண் ஒருவர் சூனியம் வைத்ததாக கூறி அவரை கும்பல் ஒன்று உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கயா மாவட்டம் துமரியா தொகுதிக்கு உட்பட்ட பஞ்ச்வா கிராமத்தை சேர்ந்த ரீட்டா தேவி (45) என்ற பெண் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்தார். தகவலறிந்த போலீசார் ரீட்டா தேவியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘சந்திரதேவ் மஞ்சி என்பவரின் மகன் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது இறப்புக்கு மஞ்சி ரீட்டா தான் காரணம் என்றும், அவர் சூனியம் வைத்ததால் தான் சந்திரதேவ் மஞ்சியின் மகன் இறந்ததாக கூறப்படுகிறது.

அதையடுத்து சந்திரதேவ் மஞ்சியின் ஆதரவாளர்களும், அவரது உறவினர்களும் சேர்ந்து ரீட்டா தேவியின் வீட்டைத் தாக்கி, அவரது வீட்டிற்கு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த ரீட்டா தேவி தீயில் கருகி உயிரிழந்தார். ரீட்டா தேவியின் மகன் அமித் குமார் மற்றும் அவரது கணவர் அர்ஜுன் தாஸ் ஆகியோர் உதவி கோரி மைக்ரா காவல் நிலையத்திற்கு வந்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், அந்த கும்பல் ேபாலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இச்சம்பவத்தை தொடர்ந்து கிராமத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். கொலை குற்றவாளிகள் ஓட்டம் பிடித்துவிட்டதால், அவர்களை தேடி வருகிறோம்’ என்றனர்.

Tags : Bihar , Teenager's mysterious death echoes; Gang who burnt woman alive for witchcraft: stone pelting on police; Terror in Bihar
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!