திருவனந்தபுரம்: கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் கல்லூரி மாணவர் ஷரோன் கொலை வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக கூறி கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் சிந்து திருவனந்தபுரத்தில் உள்ள மகளிர் சிறையிலும், நிர்மல்குமார் நெய்யாற்றின்கரை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் 2 பேரும் ஜாமீன் கோரி நேற்று நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கொலையில் தங்களுக்கு பங்கு எதுவும் இல்லை. ஆதாரங்களை அழித்ததாக மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நேற்று விசாரித்த மாஜிஸ்திரேட், சிந்து, நிர்மல்குமார்ஆகிய 2 பேரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். மேலும் விசாரணை அதிகாரியான குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சனையும் நீதிமன்றத்தில் ஆஜராக மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி சிந்துவையும், நிர்மல்குமாரையும் இன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அதன் பிறகு 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இதற்கிடையே திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கிரீஷ்மா நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடனே அவரை திருவனந்தபுரம் அட்டக்குளங்கரையில் உள்ள மகளிர் சிறையில் போலீசார்அடைத்தனர். அவரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு இன்று போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பிறகு 3 பேரையும் ராமவர்மன்சிறையில் உள்ள வீடு உள்பட குற்றத்திற்கு தொடர்புடைய இடங்களுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.