×

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் துவக்கப்படும் : மதுரை தோப்பூரில் ஆய்வுக்கு பின் அதிகாரிகள் பேட்டி

திருப்பரங்குன்றம் :எய்ம்ஸ் கட்டுமான பணிகள் ஓராண்டுக்குள் துவக்கப்படுமென, மதுரை தோப்பூரில் ஆய்வுக்கு பின் அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.   மதுரை அருகே  தோப்பூரில்  சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,970 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

பிரதமர் மோடியால் கடந்த 2019, ஜன.27ல் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டமானது, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் இருந்தது. தமிழக அரசு மற்றும் தமிழக எம்பிக்கள் தந்த அழுத்தத்தை தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ்க்கான மருத்துவ படிப்பிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு, தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகிறது.  

ஆனால் 90 சதவீத சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை தவிர, மருத்துவமனை கட்டிட பணிகள் தற்போது வரை துவங்கவில்லை. சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக மதுரையை சேர்ந்த டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து  டாக்டர் நாகராஜன், எய்ம்ஸ்  இயக்குநர் டாக்டர் எம்.ஹனுமந்த ராவ் மற்றும் ஜப்பான நிதி நிறுவன  அதிகாரிகள் ரியோ ஒகுசி, ஆதித்தி பூரி ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டனர்.

 இயக்குநர் டாக்டர் எம்.ஹனுமந்தராவ் கூறும்போது, ‘‘எய்ம்ஸ் தலைவர், ஜப்பான் நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் கட்டுமான பொறியாளர்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்டோம். மேலும் கட்டுமான பணிகளை துவக்கவும் அதற்கு எடுக்க வேண்டிய முதற்கட்ட அறிக்கைகள் தயார் செய்வது குறித்தும் விவாதித்தோம். விரைவில் கட்டுமான பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓராண்டுக்குள் பணிகளை துவங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளோம்’’ என்றார்.  

20க்கும் மேற்பட்ட குழுக்கள் ஆய்வு

மதுரை ேதாப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிட்ட அதே ஆண்டில் அறிவிப்பு வெளியிட்ட பிற மாநிலங்களில் கட்டுமான பணிகள் ஒன்றிய அரசு நிதியோடு  நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே ஜப்பான் நிறுவன நிதியை எதிர்பார்த்து கடந்த 3 ஆண்டுகளாக  சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு காத்துக்கிடக்கிறது.  

எந்த பணிகளும் நடக்காத இந்த இடத்தை இதுவரை 20க்கும் மேற்பட்ட குழுக்கள் கடந்த 2 வருடங்களாக ஆய்வு மட்டுமே மேற்கொண்டு சென்றிருக்கிறது. ஆனால் எப்போது பணிகள் துவங்கும் என்பது குறித்து இதுவரை பார்வையிட்டு ஆய்வு செய்த எந்த குழுவும் சரியான தகவல் தரவில்லை. விரைவில் பணிகளை துவக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : AIIMS ,Madurai Doppur , Madurai, AIIMS, Thoppur, MADURAI AIIMS,Construction
× RELATED சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன்பே...