ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த முள்ளுவாடி மலை கிராமத்தில் 5 பேர் தாமாக முன்வந்து டிஎஸ்பி, மாவட்ட சேர்மன் முன்னிலையில் 5 நாட்டு துப்பாக்கிகளை நேற்று ஒப்படைத்தனர்.
ஒடுகத்தூர் அடுத்த முள்ளுவாடி மலை கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பெரும்பாலானோர் விவசாய பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், மலை கிராமத்தில் ஏராளமானோர் சட்ட விரோதமாக உரிமம் இல்லாத நாட்டு துப்பாகிகளை வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த வாரம் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் முள்ளுவாடி மலை கிராமத்தில் நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மலை கிராம மக்கள் நாட்டு துப்பாக்கி ஒப்படைப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதன்படி, டிஎஸ்பி திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு ஆகியோர் முன்னிலையில் நேற்று 5 பேர் தாமாக முன்வந்து உரிமம் இல்லாத 5 நாட்டு துப்பாக்கிகளை ஒப்படைத்தனர். அப்போது, வேப்பங்குப்பம் சிறப்பு தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.