×

வரதட்சணை கொடுமை: 9 மாத கர்ப்பிணி தற்கொலை-கணவர், மாமனார் அதிரடி கைது

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் 9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா நல்லூர் நகர் பகுதியை சேர்ந்த பழனிவேல் மகள் ஐஸ்வர்யா(22). இவரும் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலம் புதுகாலனி பகுதியை சேர்ந்த தொப்பலான் மகன் புருஷோத்தமன்(23) ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2018 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியினருக்கு 2வயதில் ரட்சிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யா 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது கணவர் புருஷோத்தமன் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருவதாகவும் அந்த வகையில் மேளம் அடிக்க வெளியூர் சென்று வரும்போது பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐஸ்வர்யா தனது கணவரிடம் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது கணவர் புருஷோத்தமன் மற்றும் மாமனார் பழனிவேல் ஆகிய இருவரும் ஐஸ்வர்யாவை தாய் வீட்டில் வரதட்சணையாக பணம் வாங்கி வரச்சொல்லி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியன்று புருஷோத்தமன் வெளியே சென்றவர் இரவு லேட்டாக வந்ததாகவும் ஏன் லேட்டாக வருகிறீர்கள் என்று ஐஸ்வர்யா கேட்டுள்ளார். இதனால் மீண்டும் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வரதட்ணையாக பணம் வாங்கி வரசொல்லி மீண்டும் கணவர் துன்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலில் ஐஸ்வர்யா இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஐஸ்வர்யா தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து ஐஸ்வர்யாவை அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து கர்ப்பிணி வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கு அரசு மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்து பெண் குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால் அந்த பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி 4 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.

 இந்நிலையில்  ஐஸ்வர்யாவின் தாய் அம்சவள்ளி தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து ஐஸ்வர்யாவின் கணவர் புருஷோத்தமன் மற்றும் மாமனார் பழனிவேல் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

Tags : Dowry , Kallakurichi: A 9-month pregnant woman committed suicide after being harassed for dowry near Kallakurichi. related to this
× RELATED வரதட்சணையின்றி திருமணம் அமையும் சண்டாள யோகம்