மேலூர்: மேலூர் அருகே நள்ளிரவில் வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவி வெட்டி கொலை செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஆண்டிகோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி(42). ஆடு மேய்க்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், இவர், மனைவி செல்வி(40) இருவரும் வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பினர். இதில் இருவரின் கழுத்துப்பகுதி பாதியளவு துண்டாகியது. இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அப்போது வீட்டின் உள்ளே தூங்கி கொண்டிருந்த மகன் அஜித்குமார், சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்து பார்த்துள்ளார். அங்கு ரத்த வெள்ளத்தில் பெற்றோர் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து அவர் கீழவளவு போலீசுக்கு தகவல் கொடுத்தார். மதுரை எஸ்பி சிவபிரசாத் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.