சென்னை: கோவை கார் வெடிப்பு வழக்கு விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி ஒன்றிய அரசின் உள்துறை நேற்று உத்தரவிட்டது. கோவையில் கடந்த 23ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் என்ற துணி வியாபாரி இறந்தார். இந்த வழக்கில் கோவை போலீசார் துரிதமாக செயல்பட்டு 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதால் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்ற ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதனிடையெ சென்னை கீழ்ப்பாக்கத்தில் என்ஐஏ அலுவலகம் 4 நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது. அங்கு முதல் எப்ஐஆராக கோவை கார் வெடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.