×

பவானி அருகே தொடர் மழையால் 33 வருடங்களுக்கு பின் நிறைந்த மயிலம்பாடி ஏரி-விவசாயி, பொதுமக்கள் மகிழ்ச்சி

பவானி :  பவானி வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் 33 வருடங்களுக்குப் பின்னர் மயிலம்பாடி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரி நீர் வெளியேறி செல்கிறது.
பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மேட்டுப்பாங்கான பகுதியில் இந்த ஏரி உள்ளதால்  மழைக் காலங்களிலும் நீர்வரத்து குறைந்து காணப்படும்.

இதனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்த சுமார் 2 கிமீ தொலைவில் உள்ள மேட்டூர் மேற்கு கரை பாசன வாய்க்காலின் கசிவுநீர் குட்டை உள்ள கல்வாநாயக்கனூரிலிருந்து தண்ணீர் மின் மோட்டார் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு குழாய் மூலம்  ஏரியில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் நிதியில் குழாய்கள் பதித்து, 20 ஹெச்பி மோட்டர் பொருத்தப்பட்டு உபரிநீர் சேகரிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேட்டூர் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும்போது கசிவுநீர் குட்டையிலிருந்து நாள்தோறும் தண்ணீர் இறைக்கப்பட்டது. ஆனால், வறண்டே கிடந்த ஏரிக்கு நீர் வந்தாலும் முழு கொள்ளளவை எட்டுவதில்லை.மானாவாரி நிலங்கள் அதிகம் கொண்ட இந்த ஊராட்சியில் 36 கிராமங்களும். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வரும் நிலையில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும்.  இவர்களின் விவசாயமும் கேள்விக்குறியாகவே இருக்கும்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து செய்த கனமழையால் இந்த ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால், முழு கொள்ளளவை எட்டிய ஏரி நிறைந்து உபரி நீர் வடக்கு பகுதியில் உள்ள நீர் போக்கி வழியாக வெளியேறத் தொடங்கியது.இதுகுறித்து மைலம்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார் கூறியதாவது:

ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் கிருஷ்ணாபுரம், ஆலக்காட்டுபுதூர் வழியாக கல்வாநாயக்கனூர் கசிவுநீர்  குட்டைக்கு செல்கிறது. பின்னர் அங்கிருந்து சங்கரகவுண்டன்பாளையம் ஏரிக்கு செல்கிறது.கடந்த 1989-ம் ஆண்டு இந்த ஏரி கடைசியாக நிரம்பி உபரிநீர் வெளியேறியது. சுமார் 33 வருடங்களுக்குப் பின்னர் தற்போது இந்த ஏரி நிறைந்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால், சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதோடு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் தடையின்றி கிடைக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

காடுகளுக்குள் புகுந்த மீன்கள்

இந்த ஏரிக்கு மீன்பிடி உரிமம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் கட்லா, ரோகு, ஜிலேபி உள்ளிட்ட பல ரக மீன்களை வளர்த்து வந்தனர். ஏரிக்கு வந்த உபரிநீர் பெருக்கெடுத்து வெளியேறியதால் இங்கு வளர்க்கப்பட்டு வந்த மீன்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஏரிக்கு நீர்வரும் பாதையில் மீன்கள் எதிர்த்து புகுந்தன.  சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு குட்டைக்கும்  மீன்கள் அதிக அளவில் சென்று விட்டது.

நீர  வெளியேறி செல்லும் பாதைகளில் கரும்புக்காடு மற்றும் விவசாய தோட்டங்களில் மீன்கள் புகுந்தன. பொதுமக்கள் காடுகளுக்குள் தண்ணீரில் இருந்த மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டு பிடித்து சென்றனர். மீன்கள் வளர்ந்து மீன்பிடிக்காலம் தொடங்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டது வருத்தமளிக்கிறது . ஏரி நிறைந்தது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மீன்கள் அடித்துச் செல்லப்பட்டது இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவித்தனர்.

Tags : Mayilambadi lake ,Bhavani , Bhavani: After 33 years, Myalambadi lake reached its full capacity due to continuous heavy rains in Bhavani area.
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்