×

மேட்டூரில் பயங்கரம் அரசு மருத்துவமனையில் புகுந்து ரவுடி கழுத்தறுத்து படுகொலை: 3 பேர் அதிரடி கைது

மேட்டூர்: மேட்டூர் அரசு மருத்துவமனையில், பிரபல ரவுடி கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மேட்டூர் தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் ரகு (எ) ரகுநாதன் (22). பிரபல ரவுடியான இவர் பெயின்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ரகுநாதனும், அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி வெள்ளையன் (எ) மாரிகவுண்டனும் நண்பர்கள். இருவரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2019ல் ரகுநாதன் தொட்டில்பட்டியில் உள்ள வேறு ஒரு குழுவில் சேர்ந்துள்ளார்.

இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம், வெள்ளையன் கூட்டாளிகளுடன் ரகுநாதனின் வீட்டுக்கு சென்று, அவரிடம் வேறு குழுவில் சேர்ந்து எனக்கு எதிராக செயல்படுகிறாயா என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ரகுநாதனை வெள்ளையன் தரப்பினர் சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து கருமலைக்கூடல் போலீசார் வந்து தகராறில் ஈடுபட்ட கும்பலை விரட்டியடித்தனர். இதனிடையே, வெள்ளையன் கும்பல் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர, ரகுநாதன் சென்றதாக தெரிகிறது. இதனை அறிந்த வெள்ளையன், மூர்த்தி(36), பிரகாஷ்(30) மற்றும் சிலருடன் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ரகுநாதனிடம்,கத்தியை காட்டி மிரட்டிதகராறில் ஈடுபட்டனர்.

திடீரென வெள்ளையன் மற்றும் அவரது கூட்டாளிகள், கத்தியால் ரகுநாதனை குத்தி, கழுத்தை சரமாரியாக அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனை பார்த்து நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மருத்துவமனை போலீசார், வெள்ளையன் மற்றும் கூட்டாளிகள் தப்பி செல்லாமல் இருக்க அப்பகுதியில் கதவை தாழிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், வெள்ளையன், மூர்த்தி, பிரகாஷ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் வந்த 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளையன், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று, ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மூர்த்தி, பிரகாஷ் ஆகியோர் டேங்கர் வெல்டிங் தொழிலாளிகள்.


Tags : Payangaram ,Govt ,Hospital ,Mettur , Gangsters break into Payangaram Government Hospital in Mettur and behead: 3 arrested
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...