×

தீபாவளி பண்டிகையொட்டி பூக்கள், வாழை இலை விலை உயர்வு; காய்கறி விலை சரிவு: கோயம்பேடு வியாபாரிகள் தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில், தீபாவளி பண்டிகையொட்டி பூக்கள், வாழை இலை விலை உயர்ந்துள்ளது. அதேவேளையில், காய்கறிகள் விலை கடுமையாக சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், ஒசூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பூக்கள் தினமும் வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இம்மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், முல்லை ரூ.450க்கும், ஜாதிமல்லி ரூ.300க்கும், கனகாம்பரம் ரூ.600க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.120க்கும், சாக்லெட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர்ரோஸ் ரூ.120க்கும், மஞ்சள் ரோஸ் ரூ.160க்கும் சிவப்பு அரளி ரூ.200 க்கும் வெள்ளை அரளி ரூ.230க்கும் தவனம் ரூ.150க்கும், மருகு ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழையால் விளைச்சல் அதிகரித்துள்ளதால், அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.25க்கும், நவீன தக்காளி ரூ.30க்கும், கேரட் ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.40 க்கும் பீட்ரூட் ரூ.45க்கும், சவ்சவ் ரூ.13 க்கும் முள்ளங்கி ரூ.20க்கும், முட்டைகோஸ் ரூ.25க்கும்,வெண்டை ரூ.20க்கும் உஜாலா கத்திரிக்காய் ரூ.18க்கும் பாவக்காய் ரூ.30க்கும், புடலங்காய் ரூ.20க்கும், சுரக்காய் ரூ.25க்கும், சேனை கிழங்கு ரூ.32க்கும்,முருங்கை ரூ.60க்கும், வெள்ளரிக்காய் ரூ.10க்கும் பச்சைமிளகாய் ரூ.30க்கும், இஞ்சி ரூ.75க்கும் எலுமிச்சை ரூ.70க்கும் விற்பனை செய்யப்பட்டது.மேலும், வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு வாழை இலை கட்டு ரூ.800க்கும் ஒரு தலைவாழை இலை ரூ.4க்கும் விற்பனை ஆனது.

இதுகுறித்து, காய்கறி மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், ‘‘கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருவதால் காய்கறிகள் விளைச்சல் அமோகமாக உள்ளது. அனைத்து காய்கறிகளும் தட்டுப்பாடு இல்லாமல் மார்க்கெட்டில் வந்து இறங்கியுள்ளது.எனவே அனைத்து காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் மட்டும் 18 ரூபாயில் இருந்து ரூ.35க்கும், சின்ன வெங்காயம் ரூ.120க்கு தொடர்ந்து ஒரு வாரமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்தாண்டு தீபாவளி முன்னிட்டு, அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்தது. ஆனால், இந்தாண்டு, தீபாவளி சமயத்தில் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால், காய்கறி வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.’’ என்றார்.

Tags : Diwali festival ,Koyambedu , Flower, banana leaf prices rise on Diwali festival; Vegetable prices fall: Koyambedu traders informed
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வருகின்ற 19ம்...