சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி, புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை சேமித்து வைப்பவர்கள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளின் மீது சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 379கி(1)ன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 07.08.2021 முதல் 14.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 17,424.85 கிலோ கிராம் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை விற்பனை செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சென்னை காவல் ஆணையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 126 கடைகளை மாநகராட்சி அலுவலர்கள் மூடி சீல் வைத்துள்ளனர். சென்னையில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை சேமித்து வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது. மீறினால் காவல் துறையுடன் இணைந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.