சென்னை: ஆண்டின் சிறந்த வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூடிஏ பைனல்சில் விளையாட கோகோ, கார்சியா ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டென்னிஸ் வீரர்களுக்கு ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியும், சிறந்த வீராங்கனைகளுக்கு டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியும் நடைபெறும். அக்டோபர் வாக்கில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள், வீராங்கனைகள் ஒற்றையர் பிரிவுகளிலும், அணிகள் இரட்டையர் பிரிவிலும் பங்கேற்கும். இதில் விளையாட வாய்ப்பு கிடைப்பதை வீரர்கள், வீராங்கனைகள் பெரும் வாய்ப்பாக கருதுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் ஃபோர்ட் வொர்த் நகரில் அக்.31ம் தேதி முதல் நவ.7ம் தேதி நடக்க உள்ளது. அந்தப்போட்டிக்கு செப்டம்பர் மாதம் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி முடிந்ததும் முதல் 2 இடங்களை பிடித்த உலகின் நெம்பர் ஒன் வீராங்கனை இகா ஸ்வியாடெக்(போலாந்து), 2ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜெபூர்(துனிசியா) ஆகியோர் முதலில் தகுதிப் பெற்றனர்.
தொடர்ந்து சாண்டீகோ ஓபனில் அரையிறுதி வரை முன்னேறிய 5ம் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா(அமெரிக்கா)வும் பைனல்ஸ்க்கு முன்னேறினார். இந்நிலையில் இப்போது மெக்சிகோவில் நடந்து வரும் குவாதலஜாரா ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய 7வது நிலை வீராங்னை கோகோ காஃப்( அமெரிக்கா), 10 வது நிலை வீராங்கனை காரோலின் கார்சியா(பிரான்ஸ்) 4, 5வது வீராங்கனையாக பைனல்சுக்குள் நுழைந்துள்ளனர். இருவரும் முதன் முறையாக பைனல்சில் விளையாட உள்ளனர். எஞ்சிய 3 இடங்களுக்கான வாய்ப்பில் அரினா சபலென்கா(பெலாரஸ்), டாரியா கசட்கினா(ரஷ்யா), வெரோனிகா குதெர்மெடோவா(ரஷ்யா), மரியா சாக்கரி(கிரீஸ்), மேடிசன் கீஸ்(அமெரிக்கா), டேனியலி கொலின்ஸ்(அமெரிக்கா), யெலனா ஆஸ்டபென்கோ(லாத்வியா) ஆகியோர் உள்ளனர். இதில் கடைசியில் உள்ள ஆஸ்டபென்கோ வாய்ப்பு பெற வேண்டும் என்றால் இப்போது நடைபெறும் குவாதலஜாரா ஓபனில் சாம்பியன் பட்டம் பெற வேண்டும்.
*டபிள்யூடிஏ பைனல்ஸ் இரட்டையர் பிரிவில் களம் காண பார்பரோ கிரெஜ்சிகோவா, கேத்ரினா சினியகோவா (செக் குடியரசு) ஆகியோர் முதல் இணையாக யுஎஸ் ஓபனுக்கு பிறகு தகுதிப் பெற்றனர். அதன் பிறகு சென்னை ஓபன் சாம்பியன் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி(கனடா), கியூலியனா ஒலமஸ்(மெக்கிகோ) இணை, சாண்டியகோ சாம்பியன்கள் லிடிமிலா கிச்னோக்(உக்ரைன்), யெலனா ஆஸ்டபென்கோ(லாத்வியா), வெரோனிகா குதெர்மேடோவா(ரஷ்யா), எலிஸ் மெர்டன்ஸ்(பெல்ஜியம்) இணை, கோகோ காஃப், ஜெசிகா பெகுலா(அமெரிக்கா), சூ யிஃபன், யாங் ஜகாசுவன்(சீனா), டெசிரோ கிரவ்சிக்(அமெரிக்கா), டெமி ஸ்சூர்ஸ்(நெதர்லாந்து இணை என 7 ஜோடிகள் தகுதிப் பெற்று விட்டனர். எஞ்சிய ஒரு இடத்துக்கான போட்டியில் சானியா மிர்சா(இந்தியா), லூசி ஹரடெக்கா(செக் குடியரசு) இணை உட்பட 5 ஜோடிகள் காத்திருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ள முன்னாள் சாம்பியன் சானியாவுக்கு பைனல்சில் வாய்ப்பு கிடைப்பது அரிதுதான். காரணம், காயம் காரணமாக போட்டிகளில் அவர் பங்கேற்காமல் உள்ளார்.