சென்னை: பெண்களுக்கான உதவி மையம் எண் 181 மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 18,288 புகார்கள் வந்துள்ளது. அதில் அதிகபட்சமாக துன்புறுத்துதல் மற்றும் வன்முறை பிரிவில் 6,711 புகார்கள் பதியப்பட்டுள்ளது. மேலும் பெண்களை பின் தொடர்தல், வரதட்சணைக்கு தனிபிரிவு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கான உதவி மையம் எண் 181 மூலம் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை நாளுக்க நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெண்களை பின்தொடர்தல் மற்றும் வரதட்சணைகள் தொடர்பாக புகார்கள் அளிக்கும் வகையில் தனிபிரிவுகள் எதுவும் இல்லை. அதில் புகார் அளிக்கும் பட்சத்தில் ஏதாவது பிரிவுகளில் வழக்குகளாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது.
குறிப்பாக பெண்களை பின் தொடர்தல் மூலம் கடந்த சில ஆண்டுகளில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பின்தொடர்தல் குற்றத்திற்கு ஐபிசி 354டி பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படுகிறது. இருப்பினும் 181 உதவிமையம் எண்ணில் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் பதிவாகாமல் இருப்பது பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெறும் போது புகார் அளித்தும் வழக்குகள் பதிவு செய்யாததால் புகார் அளிக்க பெண்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே வரதட்சணை மற்றும் பின் தொடர்தல் போன்றவை குறித்து புகார் அளிக்கும் வகையில் தனியாக பிரிவுகள் உருவாக்க வேண்டும் என்று பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கடந்த 2018ம் ஆண்டு உதவி மைய எண் 181 மூலம் 5,811 புகார்கள் பெறப்பட்டது. அதில் அதிகபட்சமாக வன்முறை, துன்புறுத்தியதாக 4,303 புகார்களும், பணி இடங்களில் துன்புறுத்தியதாக 210 புகார்களும் பெறப்பட்டது. அதைப்போன்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்களில் 18,288 அழைப்புகள் வந்துள்ளது. அதில் துன்புறுத்துதல் மற்றும் வன்முறை பிரிவில் 6,711 புகார்கள் வந்துள்ளது. மேலும் பெண்களுக்கு எதிரான பல வகையான குற்றங்கள் உள்ளன. ஆனால் பிரச்னையில் தீவிரத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மேலும் அதிக அளவில் புகார் அளிக்கும் வகையில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இது குற்றத்தின் வடிவத்தை புரிந்துகொள்ளவும், தீர்வு வழிமுறைகளை வலுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உதவும் என சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். பெண்கள் புகாரளிக்க வந்தால் அவர்களிடம் சமூகத்தை காரணம் காட்டி புகாரளிப்பதை தவிர்க்கும் வகையில் காவல் துறையினர் ஈடுபடுகின்றனர். மீறி புகாரளித்தால் இருதரப்புகளிடையே சமாதானம் செய்து விடுகின்றனர். மேலும் பெண்களும் பிரச்னையை தவிர்த்து, பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தையே தேர்வு செய்கின்றனர். இதனாலேயே பல பெண்கள் தங்கள் புகாரளிப்பதை தவிர்த்து விடுகின்றனர்.
மேலும் பரங்கிமலை சத்தியா கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே பின் தொடர்ந்து வந்து துன்புறுத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது போன்ற புகார் பதிவு செய்யப்படாததால் சாதாரண வழக்காக பதிவு செய்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதனால் எதிர்பாராத விதமாக அசாம்பாவித சம்பவம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்போதே அதை கவனித்து நடவடிக்கை எடுத்திருந்தால் கொலை நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர்.
உதவி மையம் எண் 181 மூலம்
பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை
பதிவு செய்யப்படும்
புகார்களின் வகைகள் 2021-22 2022
ஏப்ரல்- செப்டம்பர்
உறவு/திருமண பிரச்னைகள் 2,786 0
வன்முறை/துன்புறுத்தல் 4,303 6711
கோளாறு நிலை
(disorders and conditions) 699 739
குற்றம் தொடர்பான 1,346 1,161
திட்டம் தொடர்பான 6 0
சட்டரீதியான புகார் 1,247 3,339
மீட்பு மற்றும் அவசரநிலைகள் 678 888
இதர புகார்கள் 2,524 2556
குழந்தைகள் தொடர்பான குற்றம் 553 797
மூத்த குடிமக்கள் 174 290
பணிஇடங்களில் துன்புறுத்தல் 201 452
ஈவ்டீசிங் 13 0
சைபர் கிரைம் 516 1,354
எல்.ஜி.பி.டி.க்யூ - 10
