சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த தமிழக அரசின் செயலை, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மதித்து, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அந்த பரிந்துரைகளை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது. எந்தவகையிலும் இந்தியை திணிக்க ஒன்றிய அரசு முற்படக்கூடாது என்று மநீம வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் சரியான முறையில் தமிழில் பேசவும், எழுதவும், வாசிக்கவும் தெரியாத ஒரு இளைய சமுதாயம் தமிழகத்தில் உருவாகி இருப்பதும் கவலை அளிக்கிறது.