×

அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு

சென்னை: பிரதமர் மோடி பதவிக்காக எவரையும் காட்டிக் கொடுக்க தயங்காதவர் என்று பொன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் இன்று வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் நாளுக்கு நாள் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே போவதை அறிந்த நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து கீழே செல்ல முடியுமோ அந்த அளவிற்கு விமர்சனங்களை அண்மைக்காலமாக வைத்து வருகிறார்.

இந்துக்களின் நிலம், பணம், சொத்து, தாலி போன்றவற்றை காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும். ராமர் கோயிலைப் பூட்டி விடுவார்கள் என்றெல்லாம் பிரசாரம் செய்த மோடி, இப்போது அதானி, அம்பானியைக் காட்டிக் கொடுக்க துணிந்து விட்டார். ராகுல் காந்தி தொடர்ந்து அனைத்து பிரசாரங்களிலும் 22 கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மோடி அரசு செயல்படுகிறது. அரசின் பணங்கள் ஒப்பந்தங்களாக இவர்களுக்கு மடைமாற்றப்பட்டு இருக்கிறது. இவற்றை மீட்டு இந்திய மக்களுக்கு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் மோடி இவை அனைத்தையும் அப்பட்டமாக மூடி மறைத்து விட்டு, எந்தவித கூச்சமும் இல்லாமல், மிகப் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய மோடி பொய்யை சொல்லி வருகிறார்.

இப்போது தன்னுடைய பதவி நாற்காலியை தக்க வைத்துக் கொள்ள எவரையும் எந்த நேரத்திலும் காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயார் என்பதை நிரூபித்துள்ளார். தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய அதானியை எந்த அளவிற்கு பொதுத் தளங்களிலேயே அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தினார் என்பது நாடறியும். தன்னுடைய நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு தன்னை அரசியல் ஆளாக்கிய தலைவர்களையே வீழ்த்தியவர் மோடி. மோடியின் இந்த உருவத்தை அதாவது உண்மையான உள்ளுருவத்தை பாஜகவும், இந்திய மக்களும் புரிந்து கொள்வது அந்த கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது’ என்று கூறியுள்ளார்.

The post அதானி, அம்பானி குறித்து பேச்சு மூலம் மோடி பதவிக்காக எவரையும் காட்டி கொடுக்கவும் தயங்காதவர் என்பது நிரூபணமாகியுள்ளது: பொன்குமார் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Adani ,Ambani ,Modi ,Ponkumar ,Chennai ,Tamil Nadu Farmers-Workers Party ,President ,BJP ,
× RELATED ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால்...