சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடத்தினர். 100-வது நாள் போராட்டத்தின் போது நடைபெற கலவரத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தக்கல் செய்ய அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது அமைக்கப்பட்டது.
22-05-2018-ம் நாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட முந்தைய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்வதற்கு ஆணையமானது அமைக்கப்பட்டு பல்வேறு தரப்பு விசாரணையானது நடத்தப்பட்டது.
அந்த விசாரணையின் அடிப்படையில் 17 நபர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வி தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க ஆணைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
பல கோணங்களில் ஒட்டுமொத்தமாக கருதும் போது இந்த சம்பந்தமானது காவல்துறை அவர்களுக்கு உரிய அதிகாரத்தை பயன்படுத்தியற்கான நிகழ்வு அல்ல என்று நிச்சியமாக காவல்துறை வரம்பு மீறியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை. போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் நுழைந்து கண்ணில் பட்டோரையெல்லாம் காவலர்கள் தாக்கியுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், காவல்துறை தரப்பில் மிகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் முடிவுக்கு வந்ததை அடுத்து, குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு குந்தகம் இன்றி அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் 17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது.
விசாரணை ஆணையம் இறந்தவர்களின் உறவினர்கள், சட்டபூர்வ வாரிசுகளுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இறந்துபோன ஜஸ்டின் செல்வமிதீஷின் உயிரிழப்பை துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 நபர்களுக்கு இணையாக பாவித்து அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தகுந்த நிவாரணத்தை வழங்கவும், அவரது தாயாருக்கு அரசு பணி வழங்காவும், பலத்த காயமடைந்த காவலர் மணிகண்டனுக்கு மருத்துவ வசதிக்கான நிவாரணம் வழங்கவும் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலங்களில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையமானது பரிந்துரை வழங்கியுள்ளது.