தா.பழூர்: தா.பழூர் அருகே அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாக்க தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடத்தின் கடைமடை பகுதியாகும். கடந்த சில நாட்களாக மேட்டூர் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையின் முழு கொள்ளளவும் எட்டிய நிலையில் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இவை அணைக்கரை கொள்ளிடம் கீழணை கடைமடை வழியாக கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது வரும் வெள்ள நீரை 60 மதகுகள் வழியாக 57 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூரில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது 57 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த உபரி நீரின் அளவு அதிகரிக்கும் என்பதால் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் கரையோர பகுதியில் உள்ள கிராமங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.