நித்திரவிளை : குமரி மாவட்டம் கொல்லங்கோடு அரசு மேல் நிலைப்பள்ளி அருகே நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் ஒரு வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு ஏட்டுகள் சஜிகுமார், ஜோஸ் ஆகியோர் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜோதிலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் கொல்லங்கோடு அருகே பனவிளை புதுவல் புத்தன்வீடு பகுதியை சேர்ந்த அனீஷ் (24), என்பதும், சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய வந்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வாலிபர் சிறுசிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவையும், கஞ்சா விற்பனை செய்து வைத்திருந்த ரூ.3500 பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கஞ்சா பொட்டலத்துடன் மெத்தலின் டயாக்சின் மெத்தா வைட்டமின் என்ற போதை பொருள் இருந்துள்ளது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இந்த மருந்துவகை போதை பொருளை சென்னையில் இருந்து வாங்கி வந்துள்ளதாக வாலிபர் கூறினார்.இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் அனீஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அனீஷ் மீது தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் திருட்டு, கஞ்சா வழக்கு ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.