திருமலை: திருப்பதி மகதி அரங்கில் திருமலை திருப்பதி தேவஸ்தான பெண் ஊழியர்களுக்கான புற்றுநோய் குறித்த 3 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதனை தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா ரெட்டி தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை கவுதமி கலந்துகொண்டு பேசியதாவது: புற்றுநோய் விழிப்புணர்வு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் முக்கியமானது. வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமென்றாலும் புற்றுநோய் வரலாம்.
முறையான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ரசாயனம் இல்லாத உணவு பொருட்களை பயன்படுத்துவதன் மூலமும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோயால் இறப்பது உறுதி என பயப்பட தேவையில்லை. இதற்கு நானே உதாரணம். பிரச்னைகளை எதிர்த்து போராடினால் தான் பெண்கள் சமூகத்தில் நிலைத்து நிற்க முடியும். நானும் அதுபோல் போராடி ஜெயித்தேன்.