கிறைஸ்ட்சர்ச்: முத்தரப்பு டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 12 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது. ஹேக்லி ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீசிய நிலையில், பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் குவித்தது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 78 ரன் (50 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கேப்டன் பாபர் ஆஸம் 22, ஷான் மசூத் 31 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின் அகமது 2, ஹசன் மகமூத், நசும் அகமது, மெகிதி ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் தோற்றது. லிட்டன் தாஸ் 35, அபிப் உசேன் 25, மிராஸ் 10, சப்பிர் ரகுமான் 14 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்த யாசிர் அலி 42 ரன்னுடன் (21 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3, முகமது நவாஸ் 2, ஷாநவாஸ், ஹரிஸ் ராவுப், ஷதாப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ரிஸ்வான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெற்றது. இன்று நடக்கும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.