×

தலையில் கல்லை போட்டு, சரமாரி வெட்டி வாலிபர், மூதாட்டி கொடூர கொலை: ஆவடி, திருமழிசையில் பயங்கரம்

சென்னை: திருமழிசையில் தலையில் கல்லை போட்டு வாலிபரும், ஆவடியில் சரமாரியாக வெட்டி மூதாட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவடிவேல். இவரது மகன் சந்தோஷ்குமார் (28). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அடுத்த குண்டுமேடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அஞ்சல் வழி கல்வி பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குண்டுமேடு பகுதியில் சந்தோஷ்குமார் தனது நண்பர் கவுதமுடன் மது அருந்தியுள்ளார். அப்போது போதையில் ஏற்பட்ட தகராறில் கவுதமின் செல்போனை பிடுங்கிக் கொண்டு சந்தோஷ்குமார் சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கவுதம் தனது தாயிடம் சொல்லவே அவரும் சந்தோஷ்குமாரை சந்தித்து, ‘’என் மகனிடம் இருந்து ஏன் செல்போனை பிடுங்கிக் கொண்டாய்’’ என்று கேட்டு எச்சரித்துள்ளார்.

அப்போது அவரை தரக்குறைவான வார்த்தைகளால் சந்தோஷ்குமார் திட்டியதாக கூறப்படுகிறது. இதுபற்றி கேள்விப்பட்டதும் கடும் கோபமடைந்த கவுதம் அங்கு வந்து சந்தோஷ் குமாரை கீழே தள்ளிவிட்டுள்ளார். பின்னர் கவுதம் (21), கருப்பு முத்து (27), அவரது உறவினர் வெள்ளை முத்து (27) ஆகியோர் சேர்ந்து அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து சந்தோஷ்குமார் தலையில் போட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை கொலை செய்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்த வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தோஷ்குமார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குபதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர். குடிபோதை தகராறில் வாலிபர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது குண்டுமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவடி: ஆவடி அருகே பொதிகை நகர், பவானியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (72). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆவடி அருகே கண்ணம்பாளையம், கோவர்த்தனகிரி பகுதிகளில் வசித்து வருகின்றனர். சாவித்திரியின் வீட்டில் 3 குடும்பத்தினர் வாடகைக்கு இருந்து வருகின்றனர். இந்த வருமானத்தில்தான் சாவித்திரி குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை மூதாட்டி சாவித்திரி வசித்த வீட்டில் இருந்து அதிகளவில் எறும்புகள் வருவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அவரது மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது 2 மகள்கள் வீட்டுக்கு விரைந்து வந்தனர். அங்கு படுக்கையறையில் சாவித்திரி தலையில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து 2 மகள்களும் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீசார் நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், நேற்றுமுன்தினம் சாவித்திரியின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் அத்துமீறி புகுந்து, அவரது தலையில் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. பின்னர், சாவித்திரியின் சடலத்தை கைப்பற்றி, கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். மேலும், சொத்து தகராறு காரணமாக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தனிப்படை அமைத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Tags : Thirumazhisai ,Aavadi , Youth, old woman brutally murdered by stoned head, barrage slashed: Awadi, Thirumazhisa horror
× RELATED ஆவடி அருகே துப்பாக்கி முனையில் ரூ.1.50...