திண்டுக்கல்: தேமுதிகவை பொறுத்தவரை பாஜ, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘பெட்ரோல் குண்டுவீச்சில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்யவேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 மக்களவை தேர்தலின் போது, சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வரும் என கூறுகின்றனர். தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தலை தான் நாங்கள் எதிர்கொள்வோம். நேர்மையாக தேர்தல் நடக்கவேண்டும். நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. தேமுதிகவை பொறுத்தவரை பாஜவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி கிடையாது. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் கிடையாது’’ என்றார்.