சென்னை: வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ பயிற்சி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான பயிற்சிகால உதவித் தொகை குறித்த விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
அயல் நாடுகளில் மருத்துவம் பயின்று பயிற்சிக்காக காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர்கள் என்பதையும், அவர்களின் மருத்துவப் படிப்பு ஏற்கெனவே காலதாமதமாகி இருப்பதையும் கருத்தில் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, நிதித் துறையில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, மருத்துவ பயிற்சியை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.