சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் முதுநிலை மருத்துவம் முடித்த டாக்டர்கள் அருண்குமார், சுபோத், முகமது பாயிஸ் உள்ளிட்ட 10 டாக்டர்கள் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு எதிராக தாக்கல் மனு செய்துள்ளனர். இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி, 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மனுதாரர்கள் நிறைவேற்றவில்லை என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒப்பந்தப்படி படிப்பு முடிந்தவுடன் மனுதாரர்களை அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு மனுதாரர்களை பயன்படுத்தவில்லை.
ஒப்பந்தப்படி 2 ஆண்டு மனுதாரர்களை பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் அவர்களின் சான்றிதழ்களை திரும்ப தரவேண்டும். எனவே, 2 ஆண்டுகள் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதால் மனுதாரர்களுக்கு சான்றிதழ்களை மருத்துவ கல்வி இயக்குனரகம் அக்டோபர் 3ம் தேதிக்குள் திரும்ப தர வேண்டும். பணியாற்ற அழைப்பு வந்து பணிக்கு செல்லாத மருத்துவர்களுக்கும், ஒப்பந்தத்தை முழுவதுமாக நிறைவேற்றாத மருத்துவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று உத்தரவிட்டார்.