×

காந்தியடிகளின் பிறந்த நாளில் கை கொடுப்போம் காதிக்கும் கைத்தறிக்கும்: அமெட் பல்கலை. - தமிழக அரசு இணைந்து ஒரேநாளில் ரூ.1 கோடி மதிப்பிலான துணிகள் விற்பனை செய்ய திட்டம்..!!

சென்னை: அமெட் பல்கலைக் கழகத்துடன் தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறை ஆகியன  இணைந்து  ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள நெசவாளர்கள் தரமானதும், விலைக்குறைவானதுமான காதி மற்றும் கைத்தறி துணிகளை கண்கவரும் வடிவமைப்புகளுடன் நெய்வதை தொழிலாகக் கொண்டுள்ளனர். பிற நிறுவனங்கள் பெரும் செலவில் கவர்ச்சிமிகு விளம்பரங்களை செய்து வெளிச்சந்தையில் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்கின்ற நிலையில்  வியாபாரப் போட்டிச் சந்தையில், பல கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளை விற்பனை செய்வதில் சிரமங்கள் உள்ளது. இதனால் நெசவுத் தொழில் செய்வோர்க்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க இயலாததால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறையின் கீழ் நெசவுப் பணி செய்யும் நெசவாளர்களுக்கு கை கொடுத்து உதவும் பொருட்டு, அவர்களால் தயாரிக்கப்பட்ட துணிகள் மற்றும் பொருட்களை, தேசத் தந்தை காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2, 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெட் பல்கலைக்கழகத்தின் சுமார் 4000 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதென்ற ஒரு சமூக சேவைத் திட்டத்தை  முன்னெடுக்க உள்ளனர். இத்திட்டத்தின்படி ஒரே நாளில் குறைந்தது ரூ.1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி துணிகளுடன், கிராமப் பொருட்களையும் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சமூக சேவைத்திட்டத்தினை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் அக்டோபர் 2, 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் அமெட் பல்கலைக்கழக வளாகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்கள். அமெட் பல்கலைக்கழகத்தின் 4000 மாணவர்களைக் கொண்டு ஒரே நாளில் ரூ. 1 கோடி மதிப்பிலான காதி மற்றும் கைத்தறி பொருட்களை விற்பனை செய்ய இயலும் போது தமிழ்நாட்டிலுள்ள 59 பல்கலைக் கழகங்கள் மற்றும் 2140 கல்லூரிகளில் பயிலும் 17,42,000 மாணவர்களை கொண்டு காதி மற்றும் கைத்தறி பொருட்களை முழுமையாக விற்பனை செய்வது எளிதானதாகும் என கருதப்படுகிறது.

இத்திட்டத்தை கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறையின் அரசு முதன்மைச் செயலர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., அவர்களும், அமெட் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல் முனைவர் க.திருவாசகம் அவர்களும்,  கைத்தறித் துறையின் ஆணையர் திரு.டி.பி.ராஜேஷ் இ.ஆ.ப., அவர்களும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் பொ.சங்கர் இ.ஆ.ப., அவர்களும், அமெட் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் திரு.ஜெயபிரகாஷ்வேல் அவர்களும், அமெட் பல்கலைக்கழகத்தின் முதல்வர் முனைவர் என்.ஆர்.ராம்குமார் அவர்களும், காதி மற்றும் கைத்தறி துறையின் அலுவலர்களும் முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

எனவே, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காதி, கைத்தறி துணிகள் மற்றும் கிராமப் பொருட்களை வாங்கி இந்த புதிய முயற்சிக்கு உறுதுணையாக இருந்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டுமென தமிழக அரசின் சார்பிலும், அமெட் பல்கலைக் கழகத்தின் சார்பிலும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Tags : Gandhiji ,Amed University ,Government of Tamil Nadu , Gandhi, Khadi, Handloom, Government of Tamil Nadu, Fabrics
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...